ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Saturday, June 15, 2013

சனி மகாதிசை



சனி மகாதிசை,சனி புத்திப் பலன்கள்

சனிமகாதிசை வருடம் 19-காக்கை வாகனனான அச்சனிபகவானின் பொசிப்புக்காலம் இதில் 3 வருடம் 3 நாள்களாகும். இக்காலகட்டத்தில் துன்பம் தரத்தக்க பலன்களே விளையும். அவையாவன: மனம் விரும்பிய பாவையரும் பாலகரும் மடிவார்கள். வெகுவான அலைச்சல் திரிச்சல் உண்டாகும். வெகுதன விரயம் ஏற்படும் என்று போகர் பேரருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சனி மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.



சனி மகாதிசை,புதன் புத்திப் பலன்கள்

காரியென்னும் சனி திசையில் புதபகவானின் பொசிப்புக்காலம் 2 வருடம் 8 மாதங்களும் 9 நாள்களுமாகும். அதன் பலனை விரிவாகச் சொல்வேன். கேட்பாயாக! அரசர் முதலோராலும் மற்றும் தாய், இன ஜன பந்துக்களாலும் மகிழ்வே உண்டாகும். ஞான மார்க்கமும், யோகமார்க்கமும் தேக சித்தியும் (நல்லுடல் வாய்ப்பும்) கருவளரும் காலம் தொட்டே உளவாகும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சனி மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சனி மகாதிசை,கேது புத்திப் பலன்கள்
சனி திசையில் கேது பகவானின் பொசிப்புக்காலம் அருளற்றதே. இது 1 வருடம் 1 மாதம் 9 நாள்கள் நடைபெறும். இக்காலகட்டத்தில் ஜாதகனுக்கு நிகழும் பலன்களாவன; சிரரோகம் ஏற்படும். கண்ணோய் வரும். மேலும் வயிறு பெருத்துக் காணும். பாண்டு போன்ற நோய் உபாதை உண்டாகும். வெகுதனமும் பெரும்பொருளும் சேதமாகும். சத்துருக்களால் மூவகையில் விரயம் உண்டாகும். நன்மையே தரும் மனைவிக்கு கெர்ப்ப நஷ்டம் ஏற்படும் என்று போகரது பேரருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சனி மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சனி மகாதிசை,சுக்கிர புத்திப் பலன்கள்
மேலும் இக்காரியென்னும் சனிபகவானின் திசையில் சுக்கிர பகவானின் பொசிப்புக்காலம் 3 வருடம் 3 மாதங்களாகும். இக்காலகட்டத்தில் பெண்களால் மனமகிழ்வு உண்டாகும். இப்புத்தி வந்த நாள் தொட்டு வெகுவான தனப்ராப்ட்தி யோகம் உண்டாகும். எப்பொழுதும் அரசரோடு இணங்கி தினம்தோறும் மகிழ்வுடன் இச்சாதகன் வாழ்வதோடு வரும் பொருள் உரைக்கும் மந்திரிமார்களோடு அவருக்குச் சமமான அணியலங்காரங்களும் ஏற்படும். கோள் சொல்லிக் கொள்ளி வைக்கும் பலவாகிய பகைவர்களும் இல்லாதொழிவர். பொன் மகள் என்னும் இலக்குமி தேவி இச்செல்வ நலங்களைத் தருவாள் என போகர்அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சனி மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.



சனி மகாதிசை,சூரிய புத்திப் பலன்கள்
இனி இச்சனி திசையில் கதிரவனாகிய சூரியனது பொசிப்புக்காலம் 11 மாதம் 12 நாள்களாகும். இந்தக் கால கட்டத்தில் விளையும் பலன்களாவன: தேகத்தில் சுர உபாதை காணுதலும் ரத்த சம்பந்தமான நோயும் வயிறுபாதையால் வாடச் செய்யும். சூலை நோயும் உடன் காணும். அதுமட்டுமல்லாமல் மனம் விரும்பும் மனைவிக்கும் மக்களுக்கும் நோயுபாதை ஏற்பட்டு வெகு வருத்தத்தை நல்கும் என்பதை உணர்க என்று போகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.

இப்பாடலில் சனி மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.



சனி மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்
காரி எனும் சனி திசையில் சந்திரபகவானின் பொசிப்புக்காலம் 1 வருடம் 7 மாதங்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன் கேட்பாயாக! பெண்களுடன் மனம் வேறுபட்டுச் சண்டையிடுவதால் துன்பம் நேரும். ஆண்டிருந்த பூமியும் அணிந்திருந்த ஆபரணங்களும் வெகுதனமும் விரயமாகும். மேலும் வெகுபேய்களும் வந்து கூடி மரணத்தைத் தரும் என போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் சனி மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சனி மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்

சனி மகாதிசையில் செவ்வாய் தன் பொசிப்புக் காலம் 1 வருடம் 2 மாதம் 9 நாள்களாகும். இக்காலகட்டத்தில் விளையும் பலன்களாவன: மனம் விரும்பும் பாவையர் நாசமாவதுடன் பகைவரும் பலவாகிப் பெருகுவார்கள். இதனால் பெருந்தனம் விரயமடையும். தேசமெங்கும் வாடித்திரிந்திடும் நிலையுண்டாகும். நன்மை செய்யும் தேவதைகள் மாறுபட்டு நிற்பதால் பிழைகள் பலவாகப் பெருகிக் காணும் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் சனி மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சனி மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்
இச்சனி பகவானின் திசையில் ராகுபகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 10 மாதம் 6 நாள்களாகும். கொடுமை செய்யும் இக்காலகட்டத்தின் பலன்களைக் குறித்துச் சொல்வேன் கேட்பாயாக! சொல்ல முடியாத நோய் வந்து பற்றும். வாந்தி காணும். தேகத்தில் ரணம் ஏற்படும். அங்கக்குறைவு ஏற்படும். அதனால் மரணமும் நேரும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சனி மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.



சனி மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்

இனி இச்சனிபகவானின் திசையில் வியாழ பகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 6 மாதம் 12 நாள்களாகும். நன்மை தரத்தக்க இக்கால கட்டத்தில் விளையும் பலன்களாவன: திருமணம் நடந்தேறும். மனத்திற்கேற்ப மனைவி அமைவாள். முதாதையர் பெரும் தனம் வகையாக வந்து சேரும். வாகனயோகம் அமையும். புதையல் தனம் கிடைக்கும், ஈனகுணம் மிக்க சத்துருக்களும் இச்சாதகனின் காலடியில் வீழ்ந்து அடிமைப் படுவர் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் சனி மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.