ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Saturday, June 15, 2013

சந்திர மகாதிசை



சந்திர மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்

இனி, சந்திர மகாதிசையில் சந்திர பகவானின் சுயபுத்தி 10, மாதங்களாகும் இவ்னது பொசிப்புக் காலத்தில் ஏற்படும் பலன்களாவன; தன்னிகரில்லா மன்னருடன் மகிழ்வுடன் நட்புக் கொள்ளச் செய்யும். சொல்லுதற்கரிய சுயம்வரங்களை கூட்டி வைத்து கல்யாண வைபோகத்தை நிறைவு செய்து மகிழ்ச்சி கொள்ளச் செய்யும். சத்துருக்களை வென்று வெற்றி வாகை சூடச் செய்யும். வேண்டிய தனலாபங்களையும் பொருட் சேர்க்கையையும் ஏற்படுத்தி மகிழ்வுதரும் என்று போகர் அருளால் புலிபாணி கூறினேன்.

இப்பாடலில் சந்திர மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

சந்திர மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்

அடுத்து, சந்திர மகாதிசையில் செவ்வாய் புத்தி ஏழு மாதங்களாகும். இவை அசுபபலன் தருபவையே. அவையாவன: வாதநோய், பித்தத்தால் ஏற்படும் வாந்திபேதி, மற்றும் வாயுவால் ஏற்படும் வியாதிகளை உண்டு பண்ணும். வெகுபலவான கள்ளர்களின் கோபத்திற்கு உள்ளாகச் செய்யும். இச்சைக்குகந்த பெண்களால் வெகு துக்கத்தை ஏற்படுத்தலும், வெகு பலமான அப்பெண்களாலும் அவர்களது சகோதரர்களாலும் கொடுமைகள் உண்டு. எனினும் தீர்க்கமாய் ஆராய்ந்து பலன் கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சந்திர மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.



சந்திர மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்

இதற்கு மேல் நான் ஒன்றையும் உனக்குச் சொல்வேன். அதையும் நீ கவனமாகக் கேட்பாயாக! சந்திர மகாதிசையில் ராகுபுத்தி பகையானதேயாகும். இச்சந்திர மகாதிசையில் ராகுவின் பொசிப்புக் காலம் பகையான தென்றாலும் நீண்ட 18 மாதங்களைக் கொண்டதாகும். இக்கால கட்டத்தில் இதற்கு ஏற்படும் சோதனையான பலன்களை நீ விவரமாகக் கேட்பாயாக! எதற்கும் அடங்காத இவர்களது சத்துருவால் இவர்களுக்கு தனநஷ்டம் ஏற்படும் என்பதையும் அறிந்து கொள்க. பல விதமான வியாதிகளும் ஏற்படும், காலம் எல்லாம் விதியானது உள்ளளவும் மந்தம் உடையதும் மத்திமமான புத்தியுள்ளதும் நாசம் செய்வதுமாக அமையும். மேலும் களத்திலுள்ள விவசாயிகளுடன் கன்று காலிகளும் மடிதல் நேரும். தங்க ஆபரணங்கள் செலவாதலும் உண்டாகும் என உணர்ந்து கிரகபலம் தன்னையும் அறிந்து கூறுக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சந்திர மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சந்திர மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்

இப்படிப்பட்ட பெருமைக்குரிய சந்திர திசையில் வியாழபுத்தியின் பொசிப்புக் காலம் 16 மாதங்களாகும். அந்தக் காலகட்டத்தில் ஏற்படும் பலன்களை நன்கு அறிந்து கேட்பாயாக! நல்ல மணமகளுடன் சுபசோபனம் உண்டாகும். அதனால் பெருத்த லாபமும் உண்டாகும். சென்னல் முதலிய விளைவயலில் விளைவாகும். மிகுந்த செல்வம் சேரும். எத்தகைய வியாதியாய் இருந்தபோதும் நிவர்த்தியாகும். எதற்கும் தலைமை தாங்கும் பண்பு ஏற்படுவதோடு பூர்வ ஜென்ம வினையும் அகலும் என்பதை நீ நன்கு உணர்வாயாக என்று போகரது கருணையால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சந்திர மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சந்திர மகாதிசை, சனி புத்திப் பலன்கள்


மேலும் இச்சந்திரதிசையில் சனிபகவானின் பொசிப்புக்காலம் 19 மாதமாகும். இக்காலகட்டத்தில் அவனது பலத்தையும் புலிப்பாணியாகிய நான் போகரது கருணையினால் கூறுவேன் அதையும் தேர்ந்து அறிவாயாக! மனம் விரும்பி இச்சாதகனை மணந்த ஜாதகி மரணமெய்த நேரும். அதனால் ஜாதகனுக்கு இதய நோய் ஏற்படும். பல விதத் தங்க ஆபரணங்களும் விரயமாகும். கள்ளர் பயமும் ஏற்படும். சத்துரு உபாதையும் உண்டு. பலவித சஞ்சலங்கள் ஏற்பட்டு இதுவரை அனுபவித்த இன்பங்களும் பாழாகும். மணமிக்க சந்தனம் முதலியகந்தப் பொருள்களை அணிவான். கல்யாணம் முதலிய சுபகாரியங்கள் நிகழும்.

இப்பாடலில் சந்திர மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

சந்திர மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்
மேலும் வேறுபாடில்லாத சந்திர திசையில் புதனின் பொசிப்புக்காலம் 17 மாதங்களேயாகும். அந்தக் கிரகத்தின் பலன்களை நன்கு அறிந்து கூறுவாயாக! ஏனெனில் குணமுள்ள மாதர்களால் அச்சாதகனுக்கு மனமகிழ்ச்சியுண்டாகும். திடுமென்று திருமணம் நிகழ்தலும் உண்டு. நிறைந்த பாக்கியங்களும் நிகழும். நவதானிய வகைகள் சேரும். தேனிலுள்ள வாசத்தைக் கலக்கும் வண்டென இச்சாதனைகளைத் தெரிவையர்கள் என்ற வயதான மங்கையர்கள் தெளிந்து நிற்பார்கள் என்று போகரது கருணையால் புலிப்பாணி பாடினேன்.

இப்பாடலில் சந்திர மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

சந்திர மகாதிசை, கேது புத்திப் பலன்கள்

மேலும், இச்சந்திர மகாதிசையில் கேது புத்தியானது, மிகவும் கலக்கத்தைச் செய்வதேயாகும். இக்கேதுவின் பொசிப்புக்காலம் ஏழு மாதம் என்பதையும் உணருக. இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவன: புகழ்தற்குரிய பெருத்த மார்பகத்தில் பிணியேற்படுதலும், இவர்களுக்காகப் பரிந்து நின்ற பெண்களுக்குப் பகைவர்களால் பெருநாசமும் விளைவதாகும். மேலும், பெற்ற தாய், தந்தை மற்றும் பிறந்த மகன் முதலியோரின் மரணமும் நேரும். அதிகப்பட்டுப்போன வியாதி பெருத்த விரயத்தை உண்டு பண்ணும். இச்சாதகன் காரணமின்றியே தேசாந்தரம் சென்றலைவான் என்று போகரது கருணையினால் புலிப்பாணி பாடினேன்.

இப்பாடலில் சந்திர மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

சந்திர மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்


இன்னும் ஒரு கருத்தைச் சொல்லுகிறேன். கேள்! சந்திர மகாதிசையில் சுக்கிரனது பொசிப்புக் காலம் 1 வருடம் 8 மாதமாகும். அவனது பொசிப்புக் காலத்தில் ஏற்படும் பலன்களைக் கூறுகிறேன் கேள். மகாலட்சுமியானவள் அவனது மனையில் சுகித்துத் தங்கிருப்பாள். வாகன யோகம் உண்டாகும். பொன்னாபரண சேர்க்கையும் முத்தாபரண சேர்க்கையும் இதமான பல்வேறு பூஷணங்களும் இணையற்றதாக இச்சாதகனுக்கு வாய்க்கும் என்று வகை தொகை அறிந்து கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சந்திர மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

சந்திர மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்

மற்றுமொரு கருத்தினை என்னன்பிற்குரிய மானே கேட்பாயாக! சந்திர மகாதிசையின் இறுதி புத்தியாகிய சூரியனின் பொசிப்புக் காலம் ஆறுமாத காலமேயாகும். இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களைக் கூறுகிறேன். நன்கு கேட்பாயாக! சத்துரு பயமும், அக்கினி பயமும் ஏற்படும். ஜுரதோடம் உண்டாகும். அதிகமான ஜுரத்தால் ஜன்னி காணுதலும் ஏற்படும். மதுவினால் மயக்கமடைதலும் தேகம் இருளடைதலும் நேரும், இலக்குமி தேவியானவள் அவனது தேகத்தை விட்டுச் சென்றுவிடுவாள். அதனால் திரவிய நஷ்டமும் சிசு நஷ்டமும் ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் சந்திர மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.