ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Saturday, June 15, 2013

சுக்கிர மகாதிசை பலன்கள்



சுக்கிர மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்
சுக்கிர மகாதிசை வருடம் மொத்தம் 20 ஆகும். இதில் சுக்கிர பகவானின் சுயபுத்தியான ஆதிக்க காலம் 3 வருடம் 4 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இச்சாதகன் பூமியில் ஓர் அரசனைப்போல வெகு சிறப்புடன் வாழ்வான். பலவிதமான சுக போகங்களும் உண்டாகும். பெருமை தரத்தக்க இலக்குமி தேவியானவள் இவனது மனையை விரும்பி ஒரு பொற்கொடி போல வந்து அமைவாள். சுப சோபனங்களும் சுபயோகங்களும் உண்டாகும். மனம் விரும்பிய மங்கையர் வாய்த்து பலவகையிலும் இன்பம் துய்த்து வாழ்வான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்
இச்சுக்கிர மகாதிசையில் சூரிய பகவானின் ஆதிக்க காலம் 1 வருடமாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! ஜுரத்தினால் பீடையுண்டாகும். நாய் கடித்தல் போன்ற பிணியும் உண்டாம். பகைவர்கள் குடிகெட்டுப்போகும் வண்ணம் கேடு நினைத்து அதனை நிறைவேற்றவும் செய்வர். நல்ல குணம் பொருந்திய தாய், தந்தையின் மரணம் முதலியன சம்பவிக்கும். குறைவற வாழ்ந்த போதிலும் அறிவில் தெளிவின்றி வெகு கலக்கம் ஏற்படும். தன் துணைவியை விட்டுப்பிரிந்து ஆண்டியாகி மலைப்பிரதேசங்களுக்குச் செல்வான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் சந்திர பகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 8 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: திருமகளைப் போல் திகழ்ந்த அன்னை மரணமடைவாள். அவளது சாவுக்குப்பின் தேடி வைத்திருந்த திரவியங்கள் நாசமாகிப் போகும்; பதர் போன்ற மனைவியை விரும்பாது அவளிடமிருந்து விலகி இச்சாதகன் ஓடிப் போதலும் நேரும். வியாதி தொடர்ந்து காண்பதால் வெகு வருத்தையும் அடைவான். சமயம் பார்த்து பழவினையானது தனது பணியைச் செய்வது எத்தனை அதிசயமானது எனப் போகர் கருணையால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் செவ்வாயின் ஆதிக்க காலம் 1 வருடம் 2 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: எலி கடித்தலால் ஏற்படும் நெடுநாள் இருமல் முதலியனவும் வந்து பற்றிக் கொள்ளும். வயிற்றில் உபாதை ஏற்படும். குதத்தில் கடுப்பு உண்டாகும். பெண்களால் தொல்லைகள் ஏற்படும், கொடுமையான பகைவனும் வந்து பற்றிக் கொள்வான் என்று போகரின் பேரருட் கருணையால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்
சுக்கிர மகாதிசையில் இராகு பகவானின் ஆதிக்க காலம் 3 வருடங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: சிரரோகம், காமாலை, சயரோகம் முதலிய நோய்கள் ஏற்படுதலோடு அரசரது பகையும், அபமிருந்து தோஷமும் மனத்திற்கினிய தாய் தந்தை மடிந்து படுதலும் ஏற்படும். மேலும் மேக நோய் எனும் ரோகம் ஏற்பட்டு தேகமெங்கும் சிரங்கு, குட்டம் போன்ற நோயுற்று அவதிப்படுவான் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்
சுக்கிர மகாதிசையில் வியாழ பகவானின், ஆதிக்க காலம் 2 வருடம் 8 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: மனம் விரும்பிய மங்கையரைச் சேர்தலும் அதனால் மங்களகரமான வாழ்வும் சுபயோகங்களும் நேரும். விரும்பிய வண்ணம் பெரும் பொருட் சேர்க்கை ஏற்படும். அச்செல்வம் மேலும் மேலும் பெருகிக் காணும். நன்மை தரத்தக்க ஆண் சந்தானமும் பெண் மக்களும் வாய்ப்பர். நாடு நகரங்கள் வசமாகும். பலவிதத்திலும் நன்மையும் வாகன யோகமும் ஏற்பட்டு சிறந்த நண்பர்களையும் பெற்றுச் சுகித்து வாழ்வான் எனப் போகர் கருணையால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசை, சனி புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் சனிபகவானின் ஆதிக்க காலம் 3 வருடம் 2 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன: வெகு தன லாபம் வாய்க்கும் பூமி, மனை முதலியன நேரும். அரச சம்பத்துடன் வாழ்வது நேரும். குலமாதர், நன்மைந்தர் அமைதலோடு நாடு நகரங்களும் உண்டாகும். மிகப்பெரிய தனவந்தனாகி ஆளுமை மிகுந்து ஒரு பெருமன்னன் என்று கூறக்கூடிய வகையில் அவனியில் பொலிவுற வாழ்வான் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் புதபகவானின் ஆதிக்க காலம் 2 வருடம் 10 மாதஙகளும். இக்கால கட்டத்தில் விளையும் பலன்களைக் கூறுவோம் தெளிவாகக் கேட்பாயாக! நாடு நகரம் வசமாகும். தன்னிகரில்லாத அரசனெனஆட்சி புரியும் நிலை ஏற்படும். முடிவில் இந்நிலவுலகில் தவத்திற் சிறந்த தவசியாதலும் நேரும். கைவிட்டுப்போம் என்று சொல்லத்தகும் பொன் முதலாகிய பொருள்களையும் பூமி லாபத்தையும் பெற்று அரச செல்வமெய்தி ஆண்டிருக்கும் நிலை ஏற்படும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசை, கேது புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் கேது பகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 2 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன: வளருகின்ற கொடிபோலும் இடையுடைய மனையாள் மரணம் நேரும். மிகுதியான திரவிய நாசம் ஏற்படும். ஒப்பாகும் மிக்காரும் இல்லாது தனித்தரசாண்டிருந்த நிலைமை மாறும். நாடு நகரங்கள் இழப்பாகும், சம்பத்து குறையும். தாய் தந்தை மரணமடைவர். கோள் வைக்கக் கூடிய சத்துருக்களால் குடிக்குக் கேடு விளையும். மனைவி மனம் வெறுத்து வீட்டைவிட்டுப் போவாள். குடும்பமானது சிதையும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.