ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Friday, September 20, 2013

Numerology - 3 - குரு (Jupiter)


3 - குரு

ஒன்பது எண்களில் 3ம் எண்ணிற்குத் தனிச்சிறப்பு உண்டு. தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியது. எப்போதுமே அடுத்தவர்க்கு நல்லது மட்டுமே செய்பவர்கள் இவர்கள்தான். இவர்களது திறமையையும், புத்திசாலித் தனத்தையும் மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டு, இவர்களுக்குரிய மரியாதையைச் செய்ய மாட்டார்கள். தனக்கு எதிரியான 6 எண்காரர்களுக்கும் இவர்கள் நன்மையே செய்வார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு உதவாமல், பல பிரச்சினைகளைக் கொடுப்பார்கள்.

தன்னை நம்பி வருவோர்க்கு நிச்சயம் உதவி செய்வார்கள். தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும், தங்களது ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்று மட்டும் மிகவும் எதிர்பார்ப்பார்கள். முகஸ்துதி செய்வதன் மூலம் மற்றவர்கள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். தங்களது உடை விஷயத்திலும், தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் விஷயத்திலும் ஆர்வமாக இருக்க மாட்டார்கள். மானத்தை மறைப்பதற்காக உடை அணிகிறோம் என்று மட்டும் நினைப்பார்கள்.

அடுத்தவர்களிடம் உதவி கேட்டுச் செல்ல மாட்டார்கள். சுயகௌரவம் பார்ப்பது இவர்களது குறைபாடாகும். இதனாலேயே பல நல்ல வாய்ப்புகளை இவர்கள் வாழ்க்கையில் இழந்திருப்பார்கள்.

இவர்கள் பழைய சாத்திரங்கள், பழைய பழக்கங்கள் ஆகியவற்றின் மீது மிகவும் மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். எனவே, கட்டுப்பாடுகளை மீறப் பயப்படுவார்கள். பெயர் கெட்டு விடுமோ என்று பெரிதும் அஞ்சுவார்கள். உயிருக்குச் சமமாக கௌரவத்தைக் காப்பாற்றுவார்கள்.

இவர்கள் அடுத்தவர்களின் வேலைக்காக மிகவும் அலைவார்கள். இவர்களின் பேச்சில் மனச்சாட்சி, விதி, நேர்மை, பாலம் போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்கள்.

இவர்கள் சுதந்திரமாக வாழவே பிரியப்படுவார்கள். கோயில் நிர்வாகம், ஊர்த்தலைமை போன்ற பதவிகளில் கௌரவமாக (ஊதியம் பெறாமல்) வேலை செய்ய விரும்புவார்கள். அன்பிற்கு அடிபணிவார்கள். அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் அடிபணிய மறுப்பார்கள். சில சமயங்களில் ஆவேசமாகவும் எதிர்ப்பார்கள். கையில் பணமிருந்தால் அழுகுக்காகவும், சிக்கனத்திற்காகவும் (தேவையைப் பற்றிக் கவலைப்படாமல்) பொருட்களை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வார்கள்.

சொத்துக்கள் விஷயத்திலும் விட்டுக் கொடுக்கும் குணம் அதிகம் உண்டு. ‘‘என் தம்பிதானே வைத்துக் கொள்ளப் போகிறான், வைத்துக் கொள்ளட்டும்.’’ என்று எதார்த்தமாக நினைப்பார்கள். தங்களத உரிமையை விட்டுக் கொடுத்து விடுவார்கள். இந்தக் குணத்தால் பல அன்பர்கள் பிற்காலத்தில் கவலைப்படுவார்கள்.

இவர்கள் தீனிப்பிரியர்கள். காபி, டீ, டிபன் போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்வார்கள்.

குரு ஆதிக்கம் நன்கு அமையப் பெற்றவர்கள். அன்பிலும், பக்தியிலும், சிறந்தவர்கள். ஏதாவது ஒரு துறையில் தனித் திறமையைக் காட்டுவார்கள். தேசப்பற்றும் நினைந்தவர்கள். பிறந்த நாட்டிற்காக உயிரையும் கொடுக்கத் தாயராவார்கள். பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்திருப்பார்கள். பார்ப்பதற்குக் கடுமையானவர்களாகத் தோன்றினாலும், வெள்ளை மனதுடன் மற்றவர்களிடம் பழகுவார்கள்.

ஆனால் குரு பலம் குறைந்தவர்கள் கடன் என்னும் பள்ளத்தில் விழுந்து விடுவார்கள். சிந்திக்காமல் பல காரியங்களில் இறங்கித் தாங்களே சிக்கிக் கொள்வார்கள். சில அன்பர்களுக்குக் காதல் தோல்விகளும் ஏற்பட்டிருக்கும்.

உடல் அமைப்பு

நடுத்தரமான உயரமுடையவர்கள். முகமானது சற்று நீண்டிருக்கும். புருவங்கள் அடர்ந்தும் நீண்டும் இருக்கும். பெரிய உதடுகள் அமையும். பல் வரிசையாக இருக்கும். தலைமுடி நரைத்தல், வழுக்கை விழுதல் இளமையிலேயே ஏற்படும். கம்பிரமான உடல் அமைப்பு உண்டு.

அதிர்ஷ்ட நாட்கள்

ஒவ்வொரு மாதத்திலும் 3, 9, 12, 18, 21, 27, 30 தேதிகள் மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதேபோன்று கூட்டு எண் 3 அல்லது 9 வரும் எண்களும் பலன்களைத் தரும்.

ஒவ்வொரு மாதத்திலும் 6, 8, 15, 17, 24, 26 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 6 அல்லது 8 வரும் தேதிகளிலும் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிட வேண்டும்

அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்

தங்கம் சிறந்த உலோகமாகும். பொன்நிற உடைகள் அதிர்ஷ்டத்தைத் தரும். செவ்வந்திக் கல் எனப்படும் கற்கள் மிகவும் யோகமானவை. புஷ்பராகம் கற்களும் நல்ல பலன்களைத் தரும். கனகபுஷ்பராகம் கல்லும் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்

தாமரைப் பூ நிறமே சிறந்தது. கத்திரிப்பு நிறம் மற்றும் நீலம் கலந்த வண்ணங்ககள் சிறப்புத் தரும். மஞ்சள் நிறமும் நன்மை அளிக்கக்கூடியதே. கருநீலம், கருப்பு, பச்சை நிறங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நண்பர்கள்

இவர்களுக்கு 3, 12, 21, 30, 9, 18, 27 ஆகிய நாட்களில் பிறந்தவர்களும், கூட்டு எண் 3 மற்றும் 9 என வரும் அன்பவர்களும் மிகவும் உதவுவார்கள். மேற்கண்ட எண்களில் பிறந்தவர்களைக் கூட்டாளிகளாகவும், நண்பர்களாகவும் வைத்துக் கொள்ளலாம். 2ம் எண்களாலும் நன்மை ஏற்படும்.

1 எண்காரர்களின் மூலம் சில நன்மைகள் ஏற்பட்டாலும் அவை நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. 6, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களிடமும் கூட்டு எண் 6, 8 வரும் அன்பர்களிடமும் கவனமாக இருக்க வேண்டும். 3ம் தேதிக்காரர்களை இவர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

திருமணம்

இவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து (பிறந்த எண் அல்லது விதி எண்) கொண்டால், வாழ்க்கைப் பயணம், இனிமையாக இருக்கும். 2 எண்காரர்களையும் மணந்து கொள்ளலாம். இவர்களை அனுசரித்துப் போவார்கள்.

நோய்களின் விபரங்கள்

இவர்களுக்குத் தோல் வியாதிகள்தான் முதல் எதிரி. பெரும்பாலோருக்கு வயிற்று வலியும், மலச்சிக்கலும், வாய்வுக் கோளாறுகளும் உண்டு. வாய்ப்புண், குடல் சம்பந்தமான நோய்களும் ஏற்படும். மூச்சுப் பிடிப்பு, சொறி சிரங்கு போன்றவைகளாலும் அடிக்கடி தொந்தரவுகள் உண்டு.

நெல்லிக்கனியும், எலுமிச்சை மற்றும் கீரை வகைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை உடலுக்கு உறுதியையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கும்.

சிறப்புப் பலன்கள்

இந்த எண் தேவர்களுக்குக் குருவான பிரஹஸ்பதியினுடையது. எல்லோருக்கும் நல்ல ஆலோசனைகள் சொல்வதும், நல்ல வழி காட்டுவதும் இவர்கள்தான். ‘‘குரு பார்க்க கோடி நன்மை’’ என்கிறது சோதிடம். இந்த 3ம் எண்காரர்களால் உலகத்தில் உள்ள மற்ற அனைவருக்கும் நன்மைகளே ஏற்படும்.

இவர்களிடம் மற்ற அனைவரையும் விடத் தாங்கள்தான் அறிவிலும், அதிகாரத்திலும் உயர்ந்து விளங்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்கேற்ற உழைப்பும் உண்டு. பிறரைக் கட்டுப்படுத்தி, தனது ஆதிக்கத்தைச் செலத்த வேண்டும் என்கிற தீவிர எண்ணங்களும் உண்டு. எந்த ஒரு செயலிலும் கட்டுப்பாடும், ஒழுங்கும் இருக்க வேண்டும் என்பார்கள். தங்களுடைய மேலதிகாரிகள், முதலாளிகள் போன்றவர்களுக்கு மிகவும் விசுவாசமாகவும், உண்மையாகவும் இருப்பார்கள். மனச்சாட்சி பார்த்துச் செயல்படுவார்கள். எனவே, வியாபாரத்திலும் அல்லது உத்தியோகத்திலும் வெகுவிரைவில் முன்னேறி விடுவார்கள்.

இவர்களது கண்டிப்பான நடத்தையின் மூலம் சில எதிரிகளும் ஏற்பட்டு விடுவார்கள். கர்வம் ஓரளவு வந்து விடும். அடுத்தவரைப் புகழ்ந்து பேசத் தயங்குவார்கள். சுதந்திர எண்ணங்களும், அடுத்தவர்களை விட மேலே இருக்க வேண்டும் என்று தீவிர எண்ணமும் உண்டு. உலகம் பாராட்டும் ஆன்மீகத் தலைவராகவோ, ராஜதந்திரியாகவோ, தங்களை வருத்திக்கொண்டு தியாகங்கள் புரியும் தேசியத் தலைவர்களாகவோ விளங்குவார்கள் இவர்களே. சுவாமி விவேகானந்தர், இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்த பாபு இராஜேந்திர பிரசாத் போன்ற மகான்கள் எல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்களே. நாணயம், பண்புடைமை, ஒழுக்கம் போன்ற நற்குணங்கள் நிறைந்தவர்கள். கடுமையான உழைப்பாளிகள். 3ன் பலம் குறைந்தால் இவர்களது உழைப்பினை எளிதான மற்றவர்கள் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் நல்ல பெயர் பெறுவார்கள். பல அன்பர்கள் ஆசிரியர்களாகவும் கல்லூரிப் பேராசிரியர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் மதப்பற்றும், தங்களது பண்பாடு, கலாசாரம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடும், நம்பிக்கையும் உடையவர்கள். புதிய நாகரிக முன்னேற்றங்களைக் குறை கூறுவார்கள். பிறருடைய நிர்ப்பந்தங்களுக்காக எந்த ஒரு ஒவ்வாத செயலையும் செய்ய மாட்டார்கள். இதனாலேயே பழமைவாதிகள் என்று முத்திரை குத்தப்படுவார்கள். இவர்களது பேச்சு உரையாடல்களில் இறைவன், விதி, நியாயம் போன்ற வார்த்தைகள் அதிகம் காணப்படும்.

குறுக்கு வழியில் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளத் தயங்குவார்கள். தங்களது விடாமுயற்சியும், சலியாத உழைப்பினாலும் எப்படியும் முன்னேறி விடுவார்கள். தங்களுடைய இயல்புக்கும், தகுதிக்கும் அப்பாற்பட்ட பதவியை அடைய விரும்ப மாட்டார்கள். அந்தஸ்து, கௌரவம் பார்ப்பதால், மற்றவர்களுக்குக் கடின மனத்தினர்கள் போல் தோன்றுவார்கள். இவர்களுக்குச் சமூகத்தில் நல்லவர், வல்லவர் என்ற பெயர் கிடைக்கும். அதனால் பண விஷயக்ளில் லாபத்தை எதிர்பார்க்க மாட்டார்கள். பொதுவாகப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிப்பில் 3ம் எண்காரர்கள் சிறந்து விளங்குவார்கள்.

3ம் எண்ணின் வலிமை குறைந்தால் தன்னம்பிக்கை குறையும். இதனால் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி, முன்னேற வகையறியாது பலர் முடங்கிக் கிடப்பார்கள். இந்த எண்களில் பிறந்த பல திறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேறாததற்கு இதுதான் காரணம். கடன்கள், எதிரிகளால் பாதிப்பு எண்ணின் பலம் குறைந்தால் நிச்சயம் ஏற்படும். இந்த திறமைசாலிகளைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் திறமை என விளம்பரப்படுத்திக் கொண்டு, புகழ்பெறுவது சில தந்திரசாலிகளின் நடைமுறையாகும்.

எனவே, குருவின் (3), ஆதிக்க நிலை உணர்ந்து, எண்ணின் பலத்தை அதிகரித்துக் கொண்டால், பொருளாதாரத்தில் முன்னேற்றம், அரசாங்க ஆதரவு, தொழில் முன்னேற்றம் நிச்சயம் ஏற்படும். இவர்களுக்குப் பெரிய சிரமங்களும், துன்பங்களும் வராது. அப்படி வந்தாலும், வெகு நாட்கள் இருக்காது. வந்த சுகதுக்கங்கள் அனைத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்வார்கள். பல 3ம் தேதி அன்பர்கள் புகழ்மிக்க எழுத்தாளர்களாகவும், கலைஞர்களாகவும் விளங்குகிறார்கள்.

காதல் விவகாரங்கள் இவருக்கு வெற்றியைத் தருவது இல்லை. தங்களது கலாசாரத்தை விட்டு வெளியே வரத் தயங்குவார்கள். நல்ல மனைவி இயற்கையாகவே அமைந்து விடுவார்கள். 3, 9, 1 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை மணந்தால், நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். வீண் செலவுகள் அதிகமாகச் செய்வார்கள். ரேஸ், லாட்டரி போன்ற துறைகளில் அதிர்ஷ்டம் குறைவுதான்.

எண் 6க்குப் பகையாக இருப்பதால், 3ம் எண்காரர்கள் தங்களது பெயரில் (தனியாக) அசையாச் சொத்துக்கள் வாங்கக் கூடாது. அனுபவத்தில் பல பிரச்சினைகளைக் கொடுக்கும். தனது மனைவி பெயரிலோ அல்லது இருவரின் கூட்டுப் பெயரிலோ வாங்கலாம். மற்றவர்களை ஏமாற்றி, அதன் மூலம் வருமானம் பெற விரும்ப மாட்டார்கள். சட்டத் தொழில் செய்பவர்கள், நீதிபதிகள், வக்கீல்கள், ஆன்மீகத் தலைவர்கள் இந்த எண்காரர்களே, வங்கி, இன்சூரன்ஸ் போன்ற அரசு உத்தியோகங்களை அடையலாம். ஜோதிடம், ஆன்மீகம் மாந்தரிகம் போன்றவற்றில் ஈடுபாடு மிக உண்டு. பெரிய வியாபாரத்தை நடத்தினாலும் நியாயமான லாபத்தையே எதிர்பார்ப்பார்கள். இவர்களை நம்பிக் காரியங்களை ஒப்படைத்தால், தங்களை உயிரைக் கொடுத்தாவது அவற்றைச் செய்து முடித்து விடுவார்கள். நாணயஸ்தர்கள்.

தொழில்கள்

இவர்களுக்கு ஆசிரியர், சோதிடர்கள் போன்ற அறிவைத் தூண்டும் தொழில்கள் சிறப்பு தரும். நல்ல அரசு உத்தியோகங்கள் கிடைக்கும் யோகம் உண்டு. தர்ம ஸ்தாபனங்களில் உத்தியோகம் கிடைக்கும். பேச்சாளர்கள் இவர்கள் சிறந்த நுண்ணிய சாத்திர ஆராய்ச்சியார்கள், ஆலோசனையாளர்கள் போன்ற துறைகளிலும் பிரகாசிப்பார்கள். பல அன்பர்கள் புத்தக விற்பனையாளர்களாகவும், பள்ளிகள் நடத்துபவர்களாவும் இருப்பார்கள். அரசியல் ஈடுபாடும் ஏற்படும். (உ.ம். கலைஞர் கருணாநிதி) நன்கு பிரகாசிப்பார்கள். எழுத்தாளர்கள், பேப்பர் கடைகள், அச்சுத் தொழில் ஆகியவையும் இவர்களுக்கு நன்கு அமையும். கல்லூரிப் பேராசிரியர்கள், தத்துவப் பேராசிரியர்கள், மேலாளர்கள் போன்ற தொழில்களும் சிறப்புத் தரும். இராணுத்திலும் நன்கு பிரகாசிப்பார்கள்.

குருவுக்கே உரிய ஆலோசனைத் தொழில்கள் (Consultancy) ஆசிரியர், பேராசிரியர் போன்ற தொழில்கள் மிகப் பொருத்தமான தொழில்கள்! நிர்வாக சக்தி மிகுந்தவர்களாக இருப்பதால் அரசியல், நிர்வாகம், வங்கி போன்ற தொழில்களில் பிரகாசிப்பார்கள். பல மொழிகளின் மீது நாட்டம் கொள்வார்கள். அறிவுத் தாகம் கொண்டு எதையாவது படித்துக் கொண்டே இருப்பார்கள். வயது இவர்களுக்குத் தடையில்லை. மேலும் நீதித்துறையிலும், வழக்கறிஞர், கோவில் அறப்பணிகள் போன்றவையும் இவர்களுக்குள்ள தொழில்கள். ஆன்மீகப் பேச்சாளர்கள், சோதிடர்கள், புத்தகம் வெளியிடுதல், எழுதல், பொது கௌரவப் பணிகள் போன்றவையும் இவர்களுக்கு ஒத்த தொழில்கள்.

அரசியல் துறையிலும் மிக உயர்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். MLA, MP போன்ற பதவிகளும், அமைச்சர் பதவிகளும் தேடி வரு. அரசாங்க நிறுவனங்கள், இராணுவம் போன்றவற்றிலும் தலைமைப் பொறுப்புகளை ஏற்று நன்முறையில் செய்வார்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை செய்வதிலும், காரியங்களை திறம்பட ஏற்று நடத்துதலிலும் வல்லவர்கள். ஆனால் எதுவும் முறைப்படி நடக்க வேண்டும் என எதிர்ப்பார்கள். மிகச் சிறந்த குமாஸ்தாக்கள், கணக்காளர்கள் இவர்களே.

3-ம் தேதி பிறந்தவர்கள்

சிறந்த சிந்தனையாளர்கள். தங்களுடைய ஆற்றலை ஆக்கரீதியாகப் பயன்படுத்திவெற்றி காண்பார்கள். பொறியியல், கணிதம், விஞ்ஞானம் போன்ற ஏதாவது ஒரு துறையில் வல்லுநர்களாக வருவார்கள். சிறந்த எழுத்தாளராகவும் இருப்பார்கள். கதை, கவிதை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். 21 வயதிற்கு மேல்தான் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

12-ம் தேதி பிறந்தவர்கள்

வாழ்க்கையில் தனியாகப் போராடப் பிறந்தவர்கள். தாய், தந்தையின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். உறவினர்களால் பயன் இல்லை. பேச்சிலே இணையற்றவர்கள். அதிகாரமாகப் பேசி தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். இவர்களது பெற்றோரின் பொருளாதார நிலையும் பாதிக்கப்படலாம். மற்றவர்களுக்காகவே உழைப்பார்கள். படிப்பு, தொழில் ஆகியவற்றில் இவர்கள் சுயமாகவே போராடி முன்னேறி விடுவார்கள். வறுமையான இளமை வாழ்வைத் தவிர்க்க முடியாது! தங்கள் தகுதியை வளர்த்துக் கொண்டால் நீதிபதிகள், வக்கீல்கள், பேராசிரியர்கள் ஆகிய பெரும் பதவிகள் தேடிவரும்.


21-ம் தேதி பிறந்தவர்கள்

எப்போதும் தங்களின் நலன் பற்றியே சிந்திப்பவர்கள். தங்களுக்குப் பிரயோசனமாக இருக்கும் தொழில்களிலேயே நாட்டம் செலுத்துவார்கள். வாழ்க்கையின் முன் பகுதியில் பல ஏற்றத் தாழ்வுகள் மூலம் நல்ல அனுபவங்களைப் பெறுவார்கள். பலமுறை தோல்விகளைச் சந்தித்தாலும் சலிக்காமல் உழைப்பார்கள். நடுவயதில் இவர்கள் பல வாழ்க்கைப் பிரச்சினைகளை சந்திப்பார்கள். உலகத்தில் புதிதாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்படுவார்கள். அதன் மூலம் பெரும் புகழும், செல்வமும் அடைவார்கள். எழுத்தும், பத்திரிகைத் தொழிலும் நன்கு அமையும்.

தங்களது வாழ்க்கையின் பிற்பகுதியில், தாங்கள் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, ஆனந்தமான வாழ்க்கை வாழ்வார்கள். அலைபாயும் (2 எண்) வாழ்க்கையானது இவர்களது திட்டமிட்ட உழைப்பால் இன்ப வாழ்வாக (1 எண் ) மாறி விடும். காரணம் சந்திரன் சூரியனுடன் சேர்ந்து மூன்றாக மாறுவதால், நல்ல பிற்கால இன்ப வாழ்க்கை உண்டு.  



30-ம் தேதி பிறந்தவர்கள்

மிகுந்த திறமைசாலிகள், பணத்தைவிடச் சுயதிருப்தியை பிரதானமாக நினைப்பார்கள். எதையும் துருவித் துருவி ஆராயும் குணம் உண்டு. உயிராபத்து வந்தால் கூட பயப்படாமல் சாதனை செய்ய விரும்புபவர்கள். பொருளாதாரத்தில் திருப்திகரமான நிலை இருக்காது. ஊதாரித்தனமாக பணத்தைச் செலவழித்துப் பின்பு வருந்துவார்கள். ஒற்றர்கள், தூதர்கள், துப்பறிவாளர்கள் போன்றவர்கள் இந்த எண்காரர்களே. கௌரவம் எப்போதும் கிடைக்கும். தனிமையிலே சிந்திப்பதில் நாட்டம் உள்ளவர்கள். அரசியல் தொடர்பும் ஏற்படும். பலருக்கும் வழுக்கையும், நரையும் விரைவில் ஏற்படும். படிப்பறிவைக் கொடுக்கும் எண் இது

குருவின் யந்திரம் (சக்கரம்)
 


10 5 12
11 9 7
6 13 8


குருவின் மந்திரம்

தேவா நாஞ்ச ரி(ரீ)ணாஞ்ச
குரும் காஞ்சந ஸ்ந்(நி)பம்
புத்திதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்

மேலும் Numerology பற்றிய தகவல்கள் அறிய கீழே உள்ள சுட்டியை பார்கவும்

Numerology 2 - சந்திரன் (Moon)


2 - சந்திரன்

இந்த 2ம் எண்ணைப் பற்றிய தவறான கருத்து மக்களை தேவையில்லாமல் பயப்படுத்துகின்றன. உண்மை அதுவன்று. பெரும் மரங்கள் சாய்ந்தாலும் நாணல் மட்டும் நிலைத்து நிற்கம். ஒவ்வொருவர் வாழ்விலும் புயல் (சோதனைகள்) என்பது நிச்சயம் ஏற்படும். அதற்கு எந்த எண்ணும் விதிவிலக்கல்ல. மற்ற எண்காரர்கள் துவண்டு விடும்போது இவர்கள் மட்டும் வாழ்க்கையின் சோதனைகளில் வளைந்து கொடுத்து, முன்னேறி விடுவார்கள். அம்பாளின் அருள் பெற்ற எண் இது. பகலுக்கு இராஜா சூரியன் என்றால் இரவுக்கு ராணி சந்திரன். சூரியன் தந்தைகாரன் சந்திரன் மாதாகாரகன். எனவே இந்த எண்காரர்களிடம் பெண்மையும், மென்மையும் உண்டு. இவர்கள் ஓரளவு தடித்த தேகத்தினர்தாம். இதில் பிறந்த ஆண்கள் சுருட்டை முடியையும், பெண்கள் நீண்ட முடியையும் கொண்டவர்கள்.

இவர்கள் எவ்வளவு தூரம் வளைந்து கொடுக்கிறார்களோ, பல சமயங்களில் அதைவிடக் கடின சித்தராகவும் மாறிவிடுவார்கள். மனத்தினால் செய்யும் தொழில்களில் (கற்பனை, கவிதை, திட்டமிடுதல் போன்றவற்றில்) மிகவும் விருப்பமுடன் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் குணம் உள்ளதால், மக்களால் பெரிதும் விரும்பப்படுவார்கள். கற்பனை கலந்து கவர்ச்சியுடன் பேசுவதால் இவர்களுக்கு மக்களாதரவு உண்டு. பெரும்பாலோருக்கு முன்னோர்கள் சொத்துக்கள் இருக்கும். இந்த எண்ணின் ஆதிக்கம் குறைந்தவர்கள் வீண்பிடிவாதம் கொண்டு தங்கள் வாழக்கையைத் தாங்களே கெடுத்துக் கொள்வார்கள். நீதிமன்ற வழக்குகளிலும் சிக்கலை தந்து விடும். முன்னோர் சொத்துக்களையும் இழக்க நேரிடும். மனதில் நிம்மதி இருக்காது. இவர்களின் வெற்றிக்கும் அல்லது தோல்விக்கும் ஒரு பெண்ணே காரணமாக இருப்பாள். காரணம் இவர்களுக்குச் சந்தேகம் குணம் அதிகம் உண்டு. இதனால் முழுமையாக யாரையும், நம்பாமல் திரும்பத் திரும்ப மற்றவர்களடன் சந்தேகம் கொள்வதால்தான். இவர்களுக்கு எதிரிகள் உருவாகின்றனர். எதையும் பதட்டத்துடனும், ஒருவித சோம்பலுடனும் அணுகும் குணத்தினையும் மாற்றிக் கொண்டால் இவர்கள் நிச்சயம் முன்னேறுவார்கள். முக்கிய காரியங்கள் எவற்றையும் சட்டென முடிக்காமல் காலத்தைக் கழித்து விட்டு, பின்பு அவசரம் அவசரமாகச் செய்து முடிபார்கள். ஒரு மாதத்தின் இறுதியில்தான் அவசர அவசரமாக உட்கார்ந்து அந்தந்த மாதத்தின் வேலையை முடிப்பார்கள். தங்களது வாக்குறுதிகளை இவர்கள் காப்பாற்றுவது மிகவும் சிரமம். திருநெல்வேலி சென்றவுடன் அல்வா வாங்கி அனுப்புவதாகச் சொல்வார்கள். ஆனால் அனுப்ப மாட்டார்கள்.

சந்திர ஆதிக்கம் நன்முறையில் அமைந்திருந்தால் நல்ல திட்டங்கள் போட்டும் அவற்றில் வெற்றியும் அடைந்து விடுவார்கள். (உம்) தேசத்தந்தை மகாத்மா காந்தி. தங்களிடம் பல திறமைகள் இருந்தும் துணிந்து செயல்பட விருப்பப்பட மாட்டார்கள். இல்லாததைக் கற்பனை செய்து கொண்டு தங்களது வாழ்க்கையில் முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவார்கள். காலையில் சுறுசுறுப்புடன் தொடங்குவார்கள். ஆனால் மாலைக்குள் ஊக்கம் குறைந்து, சோர்ந்துவிடும் இயல்பினர்.

முக்கிய குறிப்பு

விதி எண் 2 ஆக வரும் அன்பர்கள் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலிகள். திருமணம் ஆனவுடன்தான் அம்பாளின் அனுக்கிரகத்திற்கு உட்படுவார்கள். வசதியுடன் மனைவி அல்லது மனைவி வந்தவுடன் வேலை, வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவை இந்த எண்காரர்களுக்கு ஏற்பட்டு விடும். இவர்களும் பிறந்த ஊரை விட்டு வெளியூர் சென்று தொழில், வியாபாரம் அமைந்தால்தான் நல்ல தொழில் முன்னேற்றம், நல்ல இலாபங்கள் அடையலாம். இவர்கள் நடையில் எப்போதும் வேகம் உண்டு. செலவத்தைச் சேர்ப்பதில் மிகவும் ஆசை உடையவர்கள். உலக சுகங்களை அனுபவிப்பதிலும் மிகவும் நாட்டம் உண்டு. அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் குணம் உள்ளவர்கள். மனோவசியம் மற்றும் மந்திர தந்திரங்களாலும் இவர்களுக்கு ஈடுபாடு உண்டு. தாய்மையின் இயல்பான பாசம், குடும்பப்பற்று, தேசபக்தி, ஊர்ப்பற்று, தமிழ்ப்பற்று ஆகியவை உண்டு.

பல அன்பர்கள் தங்களின் குறைகளை மறைத்துக்கொண்டு வாழகின்ற இரண்டைக் குணமுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் வெளியே தைரியமுடையவர்களாகத் தோன்றினாலும் உள்ளத்தில் பெண்மையே (பயமே) மேலோங்கி நிற்கும். எனவே, இவர்கள் ஒரு வழிகாட்டியை தேர்ந்தெடுத்து அவரின் ஆலோசனைகளின் பேரில் காரியங்களைச் செய்து வரவேண்டும்.

சந்தர்ப்பங்கள் இவர்களைத் தேடி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதைவிட்டு விட்டு இவர்கள் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி, முழு மனதுடன் செயலாற்றினால் எளிதில் இவர்களை வெற்றி மகள் தேடி வருவாள்.

உடல் அமைப்பு

இவர்கள் உயரமானவர்களாக இருப்பார்கள். சந்திரனின் வலிமை குறைந்தால், நடுத்தர உயரமாக அல்லது குள்ளமாக இருப்பார்கள். நல்ல சதைப் பற்றுள்ள உடம்பை உடையவர்கள். உடல் பலம் இராது. உருண்டையான முகமும், அகன்ற கண்களும், கனத்த இமைகளும் உண்டு. பற்கள் சீராக இருக்காது. தொந்தி விழுவதை எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நாட்கள்

ஒவ்வொரு மாதத்திலும் 7, 16, 25 ஆகிய தேதிகளும், எண் 7 வரும் தினங்களும் மிகவும் அதிர்ஷ்டமானவை. 2, 11, 20, 29 தேதிகளிலும் நடுத்தரமான நன்மையே நடக்கும். 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் சாதமான பலன்கள் நடைபெறும். 8 மற்றும் 9 எண்கள் இவர்களுக்கு கெடுதல் செய்பவையே. ஒவ்வொரு மாதத்திலும் 8, 9, 18, 26, 17, 27 ஆகிய தேதிகள் துரதிர்ஷ்டமானவை. புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்

வெள்ளி நன்மை தரும். வெள்ளியுடன் தங்கத்தையும் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்களை அடையலாம். முத்து, சந்திர காந்தக்கல், வைடூர்யம் ஆகியவை அணிந்தால் அதிர்ஷ்ட பலன்களை அடையலாம். பச்சை இரத்தினக்கல், ஜேட் என்னும் கற்களையும் அணியலாம். நல்ல பலன்களைக் கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்

1. பச்சை கலந்த வர்ணங்களும், லேசான பச்சை, மஞ்சள், வெண்மை நிறங்களும் அதிர்ஷ்டகரமானவை.
2. கருப்பு, சிவப்பு, ஆழ்ந்த நீலம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

நண்பர்கள்

இவர்களுக்கு 7, 5, 6, 1 ஆகிய நாட்களில் பிறந்தவர்கள் நண்பர்களாக அமைவார்கள். இவர்கள் 1, 2, 4, 7 ஆகிய எண்களில் பிறந்த அன்பர்களை தொழிலில் கூட்டாளியாக ஏற்றுக் கொள்ளலாம். 5ம், 6ம் நடுத்தரமானதுதான் 9 எண்காரர்களையும், 8ம் எண்காரர்களையும் கூட்டாளிகளாகச் சேர்க்க வேண்டாம்.

திருமணம்

திருமண வாழ்வில் அதிர்ஷ்டம் இருந்தாலும், தங்களுக்கு அதிர்ஷ்ட எண்களில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால்தான் இவர்களது வாழக்கை வளமாக இருக்கும். இல்லையெனில் குடும்பப் பிரச்சினைகள் கடைசிவரை இருந்துகொண்டே இருக்கும். இவர்களின் திருமணத்திற்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் ஏற்றவர்கள். இருப்பினும் 7ந் தேதி பிறந்த பெண்ணே (பிறவி எண் (அ) கூட்டு எண்) மிகவும் சிறந்தவள். ஆனால் 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. பின்பு வாழ்க்கையே நரகமாகிவிடும். 1ம் எண் பிறந்த பெண்ணும், இவர்களை அடக்கி ஆட்கொள்வாள். நல்ல வழித்துணையாக அமைவாள். எனவே மணம் புரிந்து கொள்ளலாம்.

திருமண தேதி

இவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16 மற்றும் 25 தேதிகளும், மற்றும் 1, 6, 7 எண் கூட்டு எண்களாக வரும் தினங்களிலும் செய்து கொள்ள வேண்டும்.

குடும்ப வாழ்க்கை

இந்த எண்காரர்களுக்குக் குடும்ப வாழ்க்கை சிறப்பாகச் செல்லப்படவில்லை. சிறிய பிரச்சினைகளையும் கூடப் பெரிதுபடுத்திக் கொண்டு, மனைவிடம் சண்டை போடுவார்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். குழந்தைகளாலும் நிம்மதி குறைவு. எனவே, தங்களுக்கு வரும் மனைவியின் பிறந்த எண்களை முன்பே நன்முறையில் தேர்வு செய்து கொண்டு, திருமணம் செய்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால், இவர்களும் ஆனந்தமான வாழ்க்கை வாழலாம். இவர்கள் தங்களது குடுத்பத்தில் உள்ள மனைவி, குழந்தைகளை நம்ப வேண்டும். அவர்களுடன் ஒத்துழைத்து, அவர்களிடம் அன்பு காட்டினால், பின்னர் அவர்களால் நல்ல இன்பமான வாழக்கை அடையலாம். எந்த நிலையிலும், குடும்ப நிர்வாகத்தைத் தங்களிடமே வைத்துக் கொள்ளலாமல், மனைவி அல்லது தாயாரிடம் ஒப்படைத்துவிட்டால், பாதிக் குழப்பங்கள் வராமல் தடுத்துவிடலாம்.

நோய்களின் விபரங்கள்

அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுபவர்களாதலால், வயிற்றுக் கோளாறுகள் அடிக்கடி ஏற்படும். சந்திரனின் ஆதிக்கம் குறையும்போது சிறுநீரகக் கோளாறுகள், மனச்சோர்வு, மூலவியாதிகள் தோன்றும் இவர்களுக்கு நீர்த் தாகம் அதிகம் உண்டு. தண்ணீர், காபி, டீ மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை மிகவும் விரும்புவார்கள். எனவே, இவர்கள் குடிப் பழக்கத்திற்கு மட்டும் ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு அடிமையாகி விடுவார்கள். பூசணி, பறங்கி, வெள்ளைப்பூசணி, முட்டைக்கோசு ஆகியவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சளித் தொந்தரவுகளும் அடிக்கடி ஏற்படும்.

சிறப்புப் பலன்கள்

எண் 2 என்பது மனோகாரகனான சந்திரனுக்கு உரியதாகும். இந்த எண் பெண் தன்மை கொண்டது. எனவே, இந்த எண் ஆதிக்கத்தில் பிறப்பவர்களுக்கு மனோ பலமும், கற்பனைத் திறனும் இயற்கையிலேயே உண்டு. எண்ணின் பலம் குறைந்தால் தன்னம்பிக்கைக் குறையும், மனதில் பல வீண் ஐயங்களும் ஏற்படும். உலகத்தின் கவிஞர்கள் இவர்களே. தங்களின் காரியங்களை பல கோணங்களில் சிந்தித்த பின்பே தொடங்குவார்கள். இதனால் காரிய தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இவர்களது மனத்தின் வேகத்திற்கு ஏற்றவாறு இவரது செயல்களில் வேகம் இருக்காது. எனவே, இவர்களைக் கற்பனைவாதிகள் என்று உலகம் சொல்கிறது. பேசிக் கொண்டிருப்பதில் இன்பம் காண்பவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பல கோணங்களில், உணர்ச்சிபூர்வமாகப் பேசுவார்கள். சிலர் மிகவும் கஞ்சத்தனமாகப் பணம் சேர்ப்பார்கள். வேறு சிலரோ பெரும் செலவாளிகளாக இருப்பார்கள். மனச்சோர்வு வராமல் இவர்கள் பார்த்துக் கொண்டால் செயல்களில் வெற்றி கிடைக்கும். எதிர்காலம் பற்றிய அழகிய கற்பனைகள் இவர்களுக்கு உண்டு. புதிய புதிய கற்பனைகள் இவர்களுக்கு உண்டு. புதிய புதிய எண்ணங்களும், திட்டங்களும் இவர்களுக்குத் தோன்றம். இவர்கள் தண்ணீரால் (பஞ்சபூதம்) குறிக்கப்படுகிறார்கள். எனவே, பெரும் பிடிவாதம் கொண்ட மனிதாராகவோ, அல்லது பயந்து நடுங்கும் கோழைகளாகவோ இருப்பார்கள். எனவே, இவர்கள் தங்களது குறைகளை அறிந்து, அதை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். பெரும் ஓவியர்கள், கலைஞர்கள், பாடகர்கள், இலக்கியவாதிகள் எல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்கள்தான். அடுத்தவர்களைக் குற்றம் சொல்லும் குணத்தையும், வீண் டம்பப் பேச்சையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்குத் துன்பங்கள் தொடர்ந்து வரும்போது தற்கொலை எண்ணம்கூடத் தோன்றும். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் மிகவும் பிரியமுள்ளவர்கள். தண்ணீரில் சிலருக்குக் கண்டங்கள் ஏற்படலாம். எப்படியும் வெளியூர்த் தொடர்பு, வெளிநாட்டுத் தொடர்புகள் ஏற்பட்டு அவற்றின் மூலம் பல நன்மைகள் அடைவார்கள். அடுதவர்களுக்குப் பெரிதாக யோசனை சொல்வார்கள். ஆனால் தங்கள் அளவில் குறைவாகவே பயன்படுத்திக் கொள்வார்கள். தெய்வ பக்தியும் உண்டு. தங்களின் செயல்கள் மீதே இவர்களுக்கு பல ஐயங்கள் தோன்றும். சரியாகத் தான் செய்தோமா? இல்லையா? என்று பல தடவை குழம்புவார்கள். இவர் உணர்ச்சி மயமானவ்ரகள். கோபம், பிடிவாம், ஆத்திரம் போன்ற குணங்கள் உண்டு. இக்குணங்களைத் தவிர்த்துக் கொண்டால்தான் மக்களின் மத்தியில் செல்வாக்கு அடையலாம். இந்த எண்காரர்களுக்கு குழந்தை பாக்கியம் நிறைய உண்டு. குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும்.

பொதுவாக இவர்களுக்கு தாமதமாகத்தான் திருமணம் நடக்கும். ஒரு சிலருக்கு மிக இளவயதிலேயே திருமணம் நடக்கலாம். பெரும்பாலும் பெண்களால் உதவிகள் கிடைக்கும். சில பெண்களால் இவர்கள் வாழ்க்கையில் பாதிப்பும் உண்டு. காதல் செய்வதில் மிகவும் விருப்பம் உண்டு. வரிவரியாகக் கற்பனைகளை எழுதுவார்கள். ஆனால் சந்தேகக் குணம் நிறைந்துள்ளதால் திருமண வாழ்வு பாதிக்கப்படும். இவர்கள் தியானம், யோகாசனம் போன்ற இயற்கையான பயிற்சிகளை மேற்கொண்டால் வலுவான மனமும், அலை பாயாத எண்ணங்களும் ஏற்படும். விளையாட்டுக்களில் நாட்டம் செல்லும். உள் அரங்க விளையாட்டுக்களை மிகவும் விரும்புவார்கள். எண் பலம் அதிகமானால் இராமனாக இருப்பார்கள். குறைந்தால் இராவணனாக இருப்பார்கள். தன்னம்பிக்கை பொதுவாகக் குறைவாகவே இருக்கும். பல பொருள்களில் ஒரே நேரத்தில் மனம் செலுத்துவதால் எதையும் அழமாகச் செய்யத் தெரியாது. எந்த நேரத்திலும் வாழ்க்கையில் இடறி விழுந்து விடுவோம் என்ற ஐயம் இருக்கும். எனவே, எச்சரிக்கை உணர்வும் அதிகம் உண்டு. வாழக்கையில் ஆபத்தான முடிவை (ரிஸ்க்) எடுக்கத் தயங்குவார்கள். அலுவலகத்திலும், வீட்டிலும் எந்தப் பணியையும் முழுமையாக மற்றவர்களை நம்பி ஒப்படைக்க மாட்டார்கள். சஞ்சல சுபாவமம், சபல சித்தமும் இவர்களுடன் கூடப் பிறந்தவைகள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், காரணமற்ற கவலைகளினால் தங்களை வருந்திக் கொள்வார்கள். நடக்கக்கூடாது, நடக்க முடியாத நிகழ்ச்சிகளையெல்லாம் கற்பனை செய்து கொண்டு, இவை நடந்துவிடுமோ என்று எண்ணி எண்ணிக் குழம்புவார்கள். எந்த அளவுக்குத் துணிச்சலாகப் பேசுகிறார்களோ, அந்த அளவுக்கு மனதில் பயம் இருந்துகொண்டே இருக்கும். இவர்களுக்கெனத் தனித்த பண்போ, பழக்கவழக்கமோ இருக்காது. எப்போதும் மற்றவர்களை பார்த்து, அவர்களிடன் நடை உடைகளைப் பின்பற்றுவார்கள். இதனால் இவர்களுடைய இயல்பும், பழக்கவழக்கங்களும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். தாங்கள் எடுக்கும் முடிவினையும் கூட அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். எதைப் பற்றியும் விவாதம் செய்வதில் மட்டும் மிகவும் ஈடுபாடு உண்டு.

முக்கிய ஆலோசனை

2ம் எண் சந்திரனுக்கு உரியது. சந்திரன் நன்றாகப் பிரகாசிக்கச் சூரியனின் உதவி தேவை. சூரியன் இல்லையென்றால் சந்திரனுக்குப் பிரகாசமில்லை. மதிப்புமில்லை. அதைப் போன்றே 2ம் எண் வருகிற அன்பர்கள் (பிறவி எண் அல்லது விதி எண்) ஒரு அதாவது ஆலோசகர் ஒருவரை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அவர் அடுத்த மதம் அல்லது இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இல்லையெனில் இவர்களை அவர் தமது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வார். சரியான ஆலோசகர் ஒருவரைத் தேர்ந்தெடுத்த பின்பு, அவரின் ஆலோசனைப்படியே தங்களின் காரியங்களைச் செய்து வரவேண்டும். இதனால் மனதில் தன்னம்பிக்கையும், திட்டமிட்டபடி செயல்களும் உருவாகும். வெற்றிகள் தொடரும். ஆலோசகர் கிடைக்காவிட்டால் அவரவர்களின் இஷ்டப்பட்ட இறைவனின் சன்னிதானம் சென்று (தட்சிணாமூர்த்தி முன்பு சிறப்பானது) உங்களது பிரச்சினைகளைச் சொல்லி இறைவனிடம் பிரார்த்தியுங்கள். உங்களுக்கு இறைவனின் கருணை இயற்கையிலேயே மிக உண்டு. இதன் மூலம் நல்ல வழித் தூண்டுதலும், செயல் முன்னேற்றமும் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

திரவ உணவுகளே இவர்களுக்கு மிகவும் பிடித்தமானது. டீ, காபி, பானங்கள் ஆகியவற்றை விரும்பி அருந்துவார்கள். மதுப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இவர்களது வாழ்க்கை மதுவாலேயே அழிந்துவிடும்.

தொழில்கள்

இவர்கள் கலை மற்றும் தண்ணீர் தொடர்புள்ள தொழில்களைச் செய்பவர்களாக இருப்பார்கள். திரைப்படம் தயாரிப்பது, பத்திரிகை நடத்துதல் மற்றும் எழுதுதல் ஆகியவையும் ஒத்து வரும். பேச்சாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், பாடல் எழுதுபவர்கள் போன்றவர்களாகவும் இருப்பார்கள். விவசாயம், ஜவுளி வியாபாரம், நகை, வெள்ளி ஆபரணங்கள் விற்பனை, புகைப்படத் தொழில் ஆகிய தொழில்களும் நன்கு அமையும். துணி தைத்தல், துணி வெளுத்தல், மர வியாபாரம், வாசனைத் திரவியங்கள், காய்கறிகள் விற்பனையும் இவர்களுக்கான தொழில்கள். கற்பனை சக்தி அதிகம் உள்ளதால், மனோ வேகம் அதிகமாக இருக்கும். இவர்கள் பேச்சில் வல்லவர்களாக இருப்பதால் வக்கீல் தொழில், வாக்குவாதம் செய்தல் போன்றவையும் ஒத்து வரும். மனத்தில் சந்தேகமும், அதைரியமும் எப்போதும் இவர்களை வாட்டி வரும். அவற்றை தகுந்த குருவின் மூலம் ஆலோசனைகள் பெற்று நீக்கிக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கும் அரசாங்க உத்தியோகம் யோகம் உண்டு. நீர் சம்பந்தமான மீன் பிடித்தல், படகோட்டுதல் மற்றும் நர்ஸ்கள், ஆயாக்கள் போன்ற வேலைகளும், அடிக்கடி பிரயாணம் செய்யும் தொழில்கள் இவர்களுக்கு ஒத்து வரும். இவர்கள் ஆசை மற்றும் எதிர்பார்ப்புடன் செயலாற்றுவார்கள். அடுத்த தொழில் இலாபம் என்று தொழிலை அடிக்கடி உறுதியுடன் தொடர்ந்து ஒரே தொழிலை வியாபாரத்தை நம்பிக்கையுடன் செய்து வந்தால் வெற்றிகள் நிச்சியம்.

கடல் வணிகம் போன்ற தொழில்களிலும் ஈடுபடுவார்கள். இரசாயனம், மருத்துவம், சட்டம், தர்க்கம், தாவர இயல், சரித்திரம், தத்துவம் இவர்களுக்கு பொருத்தமான துறைகள். ஆசிரியர் தொழிலும் நன்கு அமையும். விதி எண்ணும் பெயர் எண்ணும் இவர்களது தொழிலை மாற்றி விடும் வல்லமை பெற்றது.

2-ம் தேதி பிறந்தவர்கள்

உயர்ந்த இலட்சியத்தை ஏற்றுச் செயல்படுவார்கள். கற்பனைச் சக்தியும் அதிகம் உடையவர்கள். சாந்தமும், அமைதியும் உடையவர்கள். மக்கள் சீர் திருத்த எண்ணங்கள் உருவாகும். பேச்சு வார்த்தைகள் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புவார்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், நடிகர்கள் போன்றோர் உருவாகும் நாள் இது. 2ம் எண்ணின் முழு ஆதிக்கமும் கொண்டது.





11-ம் தேதி பிறந்தவர்கள்

விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். தன்னம்பிக்கையுடன் முன்னேறுவார்கள். தெய்வீக ஆற்றல் உண்டு. வாக்கு பலிதமும் உண்டு. பொது நலத்திற்காகத் தங்களது அறிவைப் பயன்படுத்துவார்கள். இதனால் பல சோதனைகளும் உண்டாகும். தேவைக்கு ஏற்ற பொருளாதாரம் நிச்சயம் உண்டு. நிம்மதியான வாழக்கை உண்டு. தங்களது திறமைகளைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டால், பொருளாதார நிலையை மிகவும் உயர்த்திக் கொள்ளலாம். ஆனாலும் மனம் வராமல், தயங்கி நிற்பார்கள்.


20-ம் தேதி பிறந்தவர்கள்

மற்ற மக்களுக்காக உரிமையுடன போராடுவார்கள் இவர்களே, ஆனாலும், பேராசை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுயநலத்தை விட்டுவிட்டால், பெரும் புகழும், செல்வமும் வந்து சேரும். பல மக்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். கற்பனை வளம் நிறைந்தவர்கள். தங்களது உணர்ச்சிகரமான பேச்சினால், மக்களை வசியம் பண்ணும் ஆற்றல் உண்டு. தன்னம்பிக்கை அதிகம் உண்டு. அது ஆணவமாக மாறாமல் பார்த்துக் கொண்டால் வாழ்க்கை நன்கு அமையும்.

29-ம் தேதி பிறந்தவர்கள்

2ம் எண்ணின் ஆதிக்கம் மிகவும் குறைந்த எண் இது. இதனால் இவர்கள் போராடும் மனோபலம் உடையவர்கள். பிரச்சினைகளை வாய்ச் சமர்த்தினாலும், தேவைப்பட்டால் வன்முறையில் கூட இறங்கிச் சமாளிக்கத் தயங்க மாட்டார்கள். திருமண வாழக்கை பல பிரச்சினைகள் உடையதாக இருக்கும். பஞ்சாயத்து வரை சென்று, குடும்பப் பிரச்சினைகள் தீரும். தங்கள் ஆற்றலை நல்ல காரியங்களுக்காகச் செலவிடவில்லையென்றால், இவர்கள் சமூக விரோதியாக மாறவும் வாய்ப்பு உண்டு. சமுதாயத்திற்கே இவர்களால் தொந்தரவு ஏற்படலாம். சர்வாதிகாரிகள் பலர் இந்த எண்ணில் பிறந்தவர்கள். கடத்தல், கள்ளச் சந்தை போன்றவற்றில் கூட ஈடுபடத் தயங்க மாட்டார்கள். அதிகாரிகளாக இருந்தால் லஞ்சம், கள்ளக் கையெழுத்து (போர்ஜரி) போன்றவற்றில் ஈடுபடவும் துணிவார்கள். 29ந் தேதியில் பிறந்த நல்லவர்களால், பல அரிய சாதனைகளும் உலகில் நிகழ்ந்துள்ளன. தங்களுடைய வாழ்க்கைப் பாதையைச் சரியான பாதையில், விடாப்பிடியாக நடந்தால் இவர்கள் மனிதர்களில் மாணிக்கமாவார்கள். எதிரி மிஞ்சினால் கெஞ்சுவதும், கெஞ்சினால் மிஞ்சுவதும் இவர்களின் சுபாவமாகும். வீறாப்புப் பேச்சும், நல்லவர் போன்ற நடிப்பும் உண்டு. எதற்கும் ஆட்சேபணை எழுப்பும் பிடிவாதமும் உண்டு. கூட்டு எண்ணைப் பொறுத்து வாழ்க்கையின் முடிவு அமையும்.


சந்திரனின் யந்திரம் (சக்கரம்)


7 2 9
8 6 4
3 10 5


சந்திரனின் மந்திரம்

ததிசங்க துஷாராபம்
ஷீரோ தார்ணவ ஸம்பவம்
நாமம் சசிநம் ஸோமம்
சம்போர் மகுட பூஷணம்



மேலும் Numerology பற்றிய தகவல்கள் அறிய கீழே உள்ள சுட்டியை பார்கவும்

Numerology - 1 - சூரியன் (Sun)

      1 -  சூரியன்

எல்லா எண்களுக்கும் இந்த ஒன்றாம் எண்ணே தலைமை வகிக்கிறது. நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சி செய்கிறார். இந்த எண்ணில் பிறந்தவர்கள் பழகுவதற்கும், பார்வைக்கம் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்குவார்கள். ஆனால் அதே சமயம் மனித நேயத்துடனும் அவர்களுடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத் தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள். அடுத்தவர்களுடன் விவாதித்தால் கௌரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள்.

அரசியல் அல்லது அரசு சார்ந்துள்ள தொழில்கள், உத்தியோகங்கள் இவர்களுக்கு நிச்சயம் ஏற்படும். 1 எண் ஆதிக்கம் நன்கு அமைந்திருந்தால், (பெரும்பாலும்) இவர்கள் அரசியலில் பெரும் செல்வாக்குடன் விளங்குவார்கள். ஆனால் நாணயமான அரசியல்வாதிகள் என்று பெயர் எடுப்பார்கள். (இந்த எண்காரர்கள் மட்டும்தான்). மற்றவர்கள் அரசியலில் ஈடுபட்டால் சுயநலமும், பண வேட்கையும் அதிகமாகக் கொண்டு இருப்பார்கள். அதிகாரம் காண்பிப்பதில் இவர்கள் மிகவும் ஆசை கொண்டவர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். கடின உழைப்பும், கண்டிப்பான நடத்தையும் இவர்களைத் தலைமை ஸ்தானத்திற்குக் கொண்டு செல்லும். மனதில் ஊக்கமும், எதையும் தாங்கும் மனோபலமும் கொண்டவர்கள். தோல்வி ஏற்படுவதைத் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் மனத் துணிவுடனும், புதிய திட்டத்துடனும் சலிக்காமல் செயலாற்றுவார்கள். புதிய செய்தியினை ஆராய்வதில் மகிழ்ச்சியடைவார்கள். நேர்மையான முறையிலேயே எதையும் அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றும் அணியும் பொருள்கள் மிகவும் மதிப்பாகத் தெரிய வேண்டும் என்று அதற்காகச் செலவு செய்வார்கள். மன மகிழ்ச்சிக்காக தாராளமாகச் செலவு செய்யத் தயங்காதவர்கள்.

தாங்கள் உதவுவதைக் கூட வெளிப்படையாகச் சொல்லி விளம்பரம் அடைய ஆசைப்பட மாட்டார்கள். சூரிய புத்திரன் கர்ணன் இவரது ஆதிக்கம் நிறைந்தவர்கள். எதிரியுடன் நேரடியாகப் போரிட்டு வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவார்களே தவிரக் குறுக்கு வழியைத் தேட மாட்டார்கள். இதனால்தான் சகுனியின் சதித் திட்டங்களை எல்லாம் கர்ணன் எதிர்த்துக் கொண்டே இருந்தான். தங்களின் இரக்க குணத்ததால் பல பிரச்சினைகளையும் சந்திப்பார்கள். ஆனால் நல்ல பெயரும் புகழும் நிச்சயம் அடைவார்கள். ‘‘இவர்தான் எனது நண்பன், இவர்தான் எனது எதிரி’’ என்று எதையும் மறைத்து வைக்காமல் கூறி விடுவார்கள். மிகுந்த ரோஷமும், எதையும் எடை போடும் குணமும் உண்டு. வாக்குறுதி கொடுத்துவிட்டால் எப்பாடு பட்டாவது அதை நிறைவேற்றுவார்கள். பொதுவாகச் சோம்பேறித் தனமும், பொறாமையும் இவர்களுக்கு பிடிக்காது. அடுத்தவர் பொருட்களையும் சொத்துக்களையும் தீயென வெறுத்து ஒதுக்கி விடுபவர்கள் இவர்களே. படிப்பறிவை விடப் பட்டறிவு (அனுபவம்) அதிகம் உண்டு. இந்த எண் சுறுசுறுப்பையும், படிப்பில் ஆர்வத்தையும் கொடுக்கும். மலை வாசஸ்தலங்களும், பெரும் பயணங்களும் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

எந்த வாணிகத்திலும், நேர்மையையும், வாக்குறுதியையும் கடைப்பிடிப்பார்கள். இலாபத்திற்காகத் தங்களது மனச்சாட்சியை ஒதுக்க மாட்டார்கள். தேவையானால் பெருந்தன்மையுடன் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து விடுவார்கள். ஆனால் மற்றவர்கள் அலட்சியம் செய்தால் மட்டும் இவர்களால் தாங்க முடியாது. அவர்களை உண்டு அல்லது இல்லை எனச் செய்து விடுவார்கள். ஆனால் நேர்மையான வழியில்தான் நடப்பார்கள். பிறருக்குத் தீங்கு செய்ய மாட்டார்கள். எப்பேர்ப்பட்ட எதிரியும், நேராக வந்து மன்னிப்புக் கேட்டால், உடனே மன்னிக்கும் மாண்பு படைத்தவர்கள். மீண்டும் அவர்களுக்கு உதவியும் செய்வார்கள். பொதுவாகத் திருமணம் காலம் கடந்தே நடைபெறும். காதல் விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும் என்றாலும், ஏமாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனைவிக்கும், நேரம் ஒதுக்கி, அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அரசியலில் வெற்றி பெற, ஒரு புகழ்பெற்ற கட்சியோ, அல்லது இயக்கமோ இவர்களுக்குத் தேவை. காரணம் மக்களை ஆசை காட்டி ஏமாற்றும் வித்தைகள் இவர்களுக்குத் தெரியாது. பொதுமக்களுக்கு உண்மையான மனத்துடன் துணிந்து நன்மைகளைச் செய்வார்கள். பொதுமக்களுக்கு உண்மையான மனத்துடன் துணிந்து நன்மைகளைச் செய்வார்கள். மக்களுக்குப் பிடிக்காத செயல்களையும், மக்களின் பிற்கால நன்மைகளுக்காகத் துணிந்து காரியங்களைச் செயல்படுத்துவார்கள். எண்ணின் பலம் குறைந்தால் மேற்சொன்ன பலன்கள் மாறுபடும். சோதிடம், ஆன்மீகம், வைத்தியம் போன்ற கலைகளில் ஈடுபடும் உண்டாகும். தனிமையில் அதிகமாகச் சிந்திக்கவும், செயலாற்றவும் விரும்புவார்கள்.

உடல் அமைப்பு

நடுத்தரமாக உயரம், கம்பீரமான பார்வை, எடுப்பான நெற்றியும் உண்டு. நீண்ட தோள்களும் நன்கு வளைந்த புருவமும் உண்டு. உறுதியான பற்கள் உண்டு. ஆண்தன்மை உடைய தோற்றம் உண்டு. நடையில் ஒரு கம்பிரம் காணப்படும். பெண்களாக இருந்தால் ஓரளவு ஆணாதிக்க உடல் அமைப்பும், குணங்களும் உண்டு. கணவனைத் தனது ஆதரவிற்குள் கொண்டு வருவார்கள். அவரை நல்ல வழியில் உயர்த்தி விடுவார்கள். அன்பையும், கடினமாகவே காட்டுவார்கள். நல்ல தலைமுடியும் உண்டு. கண்களில் கூச்சம், பார்வைக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சதைப்பிடிப்பான தோற்றம் உண்டு. அடிக்கடி தலைவலி ஏற்படும்.

அதிர்ஷ்ட நாட்கள்

ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19 மற்றும் தேதி மாதம் ஆண்டு கூட்டினால் 1 வரும் தினங்கள் அதிர்ஷ்டமானவை 28ம் தேதி நடுத்தரப் பலன்களே. 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பல நல்ல பலன்கள் தானே வரும். ஆனால் நாம் தேடிச் சென்றால் தலைகீழ பலன்களே ஏற்படும். 2, 7, 11, 16, 20, 25, 29 தேதிகளில் ஓரளவு நல்ல பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்

1. தங்க மோதிரம், ஆபரணங்கள் அணிவது நன்மை தரும்.
2. மாணிக்கம், புஷ்பராகம், மஞ்சள் புஷ்பராகம் அணிவது மிக்க நலம் தரும்.
3. சிவப்பு இரத்தினத்தில், சூரிய காந்தக்கல் ஆகியவையும் மிக்க நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்

பொன்னிற உடைகளும், மஞ்சள், லேசான சிவப்பு நீலம் ஆகிய நிறங்களும் நன்மை தரும். கருப்பு மற்றும் பாக்கு நிற உடைகளையும் வர்ணங்கள் உபயோகங்களையும் தவிர்க்க வேண்டும்.

நண்பர்கள்

இவர்களுக்கு 1, 2, 3, 4, 5, 9 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்தான் நல்ல கூட்டாளிகளும், நண்பர்களாகவும் இருப்பார்கள்.

திருமணம்

இவர்கள் 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும். காரணம 1 எண் சூரியன் (ஆண்) அடுத்தவர்க்கும் இதே சூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் பிரச்சினைகளும் குடும்ப அன்யோன்ய குறைவும் ஏற்படும்.

திருமண தேதி

1, 10, 19, 28 தேதிகளும், 6, 15, 24 தேதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்ய வேண்டும். (இவர்களுக்குத் தேன் மிகவும் சிறந்தது. அடிக்கடி உணவில் தேனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொன்னாங்ககண்ணிக் கீரையும் மிகவும் ஏற்றது. கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் பித்த நீர் ஓட்டம் சமப்படும். நோய்களின் கடுமை குறைந்து வரும். இயற்கை வைத்தியத்தில்தான் இவர்களது நாட்டம் செல்லும்.)

வேண்டாத நாட்கள்

8, 17, 26 ஆகிய தேதிகளும், கூட்டு எண் 8 வரும் எண்கள் நாட்களும் புதிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. தோல்வியே ஏற்படும். இவர்களுக்கு மக்கட்பேறு உண்டு.

நோய்களின் விபரங்கள்

சூரியன் ஒரு நெருப்புக் கோளம். இதனால் இந்த எண்காரர்கள் பெரும்பாலும் வெப்பத்தால் பாதிக்கப்படுவார்கள். மலச்சிக்கல் அடிக்கடி உண்டாகும். பித்த நீர் ஓட்டம் மிகுந்துவிடும். எனவே, இரத்த ஓட்டம் சம்பந்தமான பலவித நோய்களும் குறைபாடும் உண்டாகும். கண் பார்வை குறைபாடுகளே பெரும்பாலும் இவர்களுக்கு ஏற்படும். பல அன்பர்களுக்கு அடிக்கடி தலைவலியும் ஏற்படும். அடிக்கடி கண்ணாடிகளை மாற்றிக் கொள்வார்கள். இரத்தக் கொதிப்பு, சீரணக் கோளாறுகள், படபடப்பு ஆகியவையும் ஏற்படும். பித்த சம்பந்தமான நோய்களும் ஏற்படலாம். எனவே இவர்கள் பழவகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். காரம், புளிச்சுவையையும், சீரணத்தை மந்தப்படுத்தும் உணவுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும். உலர்ந்த திராட்சை, குங்குமப்பூ, ஆரஞ்சுப்பழம், சாதிக்காய், இஞ்சி, பார்லி ஆகியவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முன்பே சொன்னபடி தேனைத் தினந்தோறும் உண்டு வந்தால் மிக்க நலம்பெற்று வாழ முடியும்.

சிறப்புப் பலன்கள்

எண் 1 ல் பிறந்தவர்கள் (விதி எண் 1 எண்காரர்கள் கூட) இந்த எண்களின் சக்தியானது தொழில் வகையிலும், அரசியல் வகையிலும், சமூக வகையிலும் நல்ல பலன்களைக் கொடுத்தாலும், இவர்களது குடும்பத்தில், மனைவி அமைவதில் மட்டும் சில குறைபாடுகளைக் கொடுத்து விடுகிறது. இந்த எண்ணில் பிறந்த (அல்லது) பெயர் அமைந்த சிலருக்கு மட்டுமே மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கை கிடைக்கிறது. ஆனால் பெரும்பாலோருக்கு இல்வாழ்க்கை என்பது தாமரை இலைத் தண்ணீரைப் போன்ற நிலையில்தான் அமைகின்றது. அன்பான மனைவி அமைந்தால் கூடத் தம்பதிகளுக்குள் பிரிவுகள் அடிக்கடி வந்து இவர்களை வாட்டுகிறது. இது தொழில் சம்பந்தமான பிரிவுகள் போன்ற தவிர்க்க முடியாதவைகளாகவே இருந்துவிடும். காதல் விஷயத்தில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எனவே இந்த அன்பர்கள் திருமணத்தை மட்டும் தங்களுக்கு அனுகூலமான தேதிகளில் பிறந்தவர்களுடன் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இவர்களுக்கு நிச்சயம் இல்லற இன்பம் அனுபவிக்கலாம். இந்த எண்ணில் பிறந்தவர்கள் (பிறவி எண், விதி எண்) எந்த ஒரு செயலையும் 4, 8 வரும் தேதிகளில் (தேதி எண் அல்லது கூட்டு எண்) செய்யக்கூடாது. திருமணம், சடங்ககுள், புதுமனை புகுதல், புதுக்கணக்கு, இடம் மாறுதல், புதிய உத்தியோகம், அல்லது உயர் பதவி ஏற்றல் கூடாது. மேலும் புதியதாகக் கடை ஆரம்பித்தல், கடன் கேட்கச் செல்லுதல்(?) பெரிய மனிதர்களை பார்க்க செல்லுதல், புதுப்பயிர் செய்தல், புதுக்கிணறு தோண்டுதல் ஆகியவை செய்யக்கூடாது.

தொழில்கள்

இவர்கள் பொதுவாக நிர்வாக சக்தி நிரம்பியவர்கள். எப்போதும் அதிகாரமுள்ள பதவிகளை வகிப்பதற்கு ஏற்றவர்கள். தங்களுக்கு கீழே உள்ளவர்களை ஏவி, வேலை வாங்கும் சக்தி நிறைந்தவர்கள். உழைப்பில் பின் வாங்காதவர்கள். எதையும் அதற்குரிய சட்டப்படி செயல்படவே விரும்புவார்கள். அரசாங்க அலுவலகஙகள், தர்ம ஸ்தாபனங்கள், கூட்டுறவுக் கழகங்கள், பொது நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் நிர்வாகியாக அமைவார்கள். எண்ணின் பலம் குறைந்தவர்கள் நம்பிக்கையான குமாஸ்தாவாக இருப்பார்கள். தனியாக நிறுவனங்களை நடத்தும் திறமை மிக்கவர்கள். ஆனால், வளைந்து கொடுக்கவோ, அனுசரித்துப் போகவோ தெரியாதவர்கள். இலாப நோக்கை விட, மனித நேயமும், தொழில் நியாயமும் இவர்களது நோக்கமாக இருக்கும். போட்டிகளில் விட்டுக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். இவர்களுக்கென ஒரு வசிய சக்தி உண்டு. இதுவே இவர்களை சிறந்த நிர்வாகியாகவும், முதலாளியாகவும் காட்டிவிடும். தொழிலில் ஏற்படும் சங்கடங்கள், போட்டிகளால் அடிக்கடி மனச்சோர்வு அடைந்தாலும், உடனே சமாளித்து விடுவார்கள். அரசாங்க காண்ட்ராக்டர்கள், புகழ்பெற்ற மருத்துவர்கள், நிணிவிஷி வியாபாரிகள் போன்ற தொழில்களும் ஒத்து வரும். விஞ்ஞானத் துறை, பொறியியல் துறை, இரசாயனத் துறை, நீதித் துறை போன்றவையும் இவர்களுக்கு ஒத்து வரும். வெங்காயம், புகையிலை, கொள்ளு, உளுந்து, கோதுமை, பழவகைகள், காய்கறி வகைகள், ஆபரணங்கள், செயற்கை நூலிழைகள், மூலிகைகள் சம்பந்தப்பட்ட வியாபாரங்கள், பிராணிகள் பராமரிப்பு, தங்கம் சம்பந்தப்பட்ட தொழில்களும் இவர்க-ளுக்கு ஏற்ற தொழில்கள். இவர்கள் தங்களது வியாபார யுக்திகளையும், விளம்பர யுக்திகளையும் காலத்திற்கேற்றபடி மாற்றிக்கொண்டு செயல்பட்டால், தங்களது தொழிலில் பெரும் வெற்றிகளைக் குவிக்கலாம்.





1-ம் தேதி பிறந்தவர்கள்

பொதுவாகத் தன் விருப்பபடியே நடப்பவர்கள். இவர்களுக்கு பிறரை அனுசரித்து போகும் குணம் குறைவு. பொறுமையுடன், மற்றவர்களையும் அரவணைத்துச் சென்றால், வாழ்க்கையில் பெரும்வெற்றி அடையலாம். தன்னம்பிக்கை மிக உண்டு. அரசு மற்றும் அதிகார உத்தியோகங்களுக்குச் செல்வார்கள்.


10-ம் தேதி பிறந்தவர்கள்

சூரிய ஆதிக்கம் ஓரளவு குறைந்துள்ளதால், மற்றவர்களை அனுசரித்து அன்புடன் நடந்து கொள்வார்கள். எதிலும் ஒரு நிதானம், ஆலோசனை உண்டு. எப்படியும் புகழ் அடைந்து விடுவார்கள். மனோ சக்தியும், தன்னம்பிக்கையும் உண்டு. பொருளாதாரத்தில் மட்டும் அடிக்கடி ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். பணம் நிர்வகிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

19-ம் தேதி பிறந்தவர்கள்

மிக்க அதிர்ஷ்டமான வாழ்க்கை ஏற்படும். தனது கொள்கையில் ஈடுபாடும், பிடிவாதமும் கொண்டவர்கள். தங்களது நடை உடை பாவனைகளில் கெடுபிடிகள் காட்டுவார்கள். பல செய்திகளையும் அறிந்து கொள்ளும் ஆர்வமும் உண்டு. அன்பால் மற்றவர்களை வெற்றி கொண்டு தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். படிப்படியான முன்னேற்றம் உண்டு.

28-ம் தேதி பிறந்தவர்கள்

சூரிய ஆதிக்கம் மிகவும் குறைவு. பொருளாதாரத்தில் ஏமாற்றங்கள் அடிக்கடி ஏற்படும். மென்மை உணர்வுகள் இருக்கும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வதாலும், பாசமுடன் பழகுவதாலும், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் அதரவு உண்டு. அதனால் ஜாமீன், கைமாற்றுக் கொடுத்துவிட்டு பின்பு பாதிப்பிற்கு உள்ளாவதும் உண்டு. 2, 8 இணைந்து வருவதால் வீண் கர்வம், டம்பப் பேச்சு ஆகியவைகளைக் குறைத்துக் கொண்டால், பண இழப்புகளையும், விரயங்களையும் தவிர்த்துக் கொள்ளலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பண விஷயங்களில் ஏமாறாமல் பார்த்துக் கொண்டால், பல நன்மைகளை அடையலாம். 



சூரியனின் யந்திரம் (சக்கரம்)


6 1 8
7 5 3
2 9 4


சூரியனின் மந்திரம்

ஜபா குஸீம சங்காசம்
காச்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம்
பரணதோஸ்மி திவாகரம்

மேலும் Numerology பற்றிய தகவல்கள் அறிய கீழே உள்ள சுட்டியை பார்கவும்